Sunday, 4 June 2017

பாடும் வானம்பாடி எஸ்.பி. பாலசுப்ரமணியம் (S.P.Balasubramaniam)


உலக அளவில் அதிக எண்ணிக்கையிலான பாடல்களைப் பாடியதற்காக கின்னஸ் உலக சாதனைகள் புத்தகத்தில் இடம் பெற்றவரும் பன்முகத் திறன் கொண்டவருமான எஸ்.பி. பாலசுப்ரமணியம் (S.P.Balasubramaniam) பிறந்த தினம் (ஜுன் 4, 1946) சிறப்பு பகிர்வு.!!


# ஆந்திரப் பிரதேசம் நெல்லூர் மாவட்டத்தில் பிறந்தவர். தந்தை ஒரு இசைக் கலைஞர். ஹரிகதா காலட்சேபம் செய்வதில் புகழ் பெற்றவர். காளஹஸ்தி பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி.யும் திருப்பதி ஆர்ட்ஸ் கல்லூரியில் பி.யு.சி.யும் பயின்றார். இளம் வயதிலேயே பாடுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார்.

# தெலுங்கு சங்கம் ஒன்று நடத்திய பாட்டுப் போட்டியில் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் முதல் பரிசை வென்றவர்களுக்கு வெள்ளிக் கோப்பை வழங்குவது வழக்கம். இரண்டு ஆண்டுகள் முதலில் வந்த இவருக்கு வெள்ளிக் கோப்பையைக் கொடுக்காமல் இருப்பதற்காக மூன்றாம் ஆண்டு வேண்டுமென்றே இரண்டாவது பரிசு என அறிவித்தனர்.

# அந்தப் போட்டிக்குத் தலைமை தாங்கிய பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி, இவர்தான் எல்லோரையும்விட சிறப்பாக பாடினார் என்று நிர்வாகிகளிடம் வாதாடி முதல் பரிசைப் பெற்றுத் தந்தார். வெள்ளிக் கோப்பையும் கிடைத்தது.

# சென்னை இன்ஜினியரிங் கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை என்பதால் தொழில் கல்வி பயின்றார். 1966-ல் கோதண்டபாணி இசையமைத்த தெலுங்குத் திரைப்படத்தில் முதன் முதலாகப் பாடினார். தொடர்ந்து பல பாடல்களைப் பாடினார். தமிழில் முதன் முதலாக சாந்தி நிலையம் திரைப்படத்தில் பாடினார்.

# ஆனால் அது வெளிவரும் முன்பே எம்.ஜி.ஆர். நடித்த அடிமைப் பெண் படத்தில் இவர் பாடிய ‘ஆயிரம் நிலவே வா’ பாடல் வெளிவந்தது. அதைத் தொடர்ந்து ஏராளமான வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தன. எம்.எஸ். விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், யுவன் ஷங்கர், ஹாரிஸ் ஜெயராஜ் உள்ளிட்ட அனைத்து இசையமைப்பாளர்கள் இசையிலும் பாடியுள்ளார்.

# முறையாகக் கர்நாடக இசையைப் பயிலாத இவர், சங்கராபரணம் படத்தில் கர்நாடக இசையில் அமைந்த பாடல்களைச் சிறப்பாகப் பாடி உலகம் முழுவதும் பிரபலமானார். அதற்காக தேசிய விருதைப் பெற்றார். தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட இவர், எந்த மொழியில் பாடினாலும் அந்த மொழிக்கேற்ற இயல்பான உச்சரிப்புடன் பாடுவது இவரது சிறப்பம்சம்.

# 40 ஆயிரம் பாடல்களுக்கும் மேல் பாடி கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். ஆறு முறை சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதினைப் பெற்றுள்ளார். தமிழக, கர்நாடக அரசுகளின் பல விருதுகளையும் ஆந்திர அரசின் நந்தி விருதினை 25 முறையும் வென்றுள்ளார். தமிழக அரசின் கலைமாமணி விருதைப் பெற்றுள்ளார்.

# 1981-ம் ஆண்டு பெங்களூரில் உள்ள ஒரு ரெகார்டிங் தியேட்டரில் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை ஒரே நாளில் 21 பாடல்களைக் கன்னட இசையமைப்பாளர் உபேந்திர குமாருக்காகப் பாடிச் சாதனை புரிந்துள்ளார். தமிழில் ஒரே நாளில் 19 பாடல்களையும், இந்தியில் 6 மணி நேரத்தில் 16 பாடல்களையும் பாடிச் சாதனை செய்துள்ளார்.

# கமல், ரஜினி, பாக்யராஜ் உள்ளிட்ட பலருக்கு பல்வேறு மொழிப் படங்களில் பின்னணிக் குரல் கொடுத்துள்ளார். தென்னிந்திய மொழிகளில் 70-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் 45 திரைப்படங்களுக்கும் மேல் இசையமைத்துள்ளார்.

# 60-களில் தொடங்கிய இவரது இசைப் பயணம் நான்கு தலைமுறை நடிகர்களுக்குப் பின்னணி பாடிய ஒரே பாடகர் என்ற பெருமையுடன் அரை நூற்றாண்டைக் கடந்தும் இன்றும் அதே இளமைத் துள்ளலுடன் தொடர்கிறது.

Friday, 2 June 2017

"இசை விஞ்ஞானி, ராகதேவன்" இளையராஜா (Ilaiayaraaja)


திரைஇசை உலகில் முடிசூடா மன்னராக விளங்கும் பிரபல இசை அமைப்பாளர் ‘இசைஞானி’ இளையராஜா (Ilaiayaraaja) பிறந்த தினம் (ஜூன் 2, 1943) சிறப்பு பகிர்வு.!!


l தேனி மாவட்டம் பண்ணைபுரத்தில் பிறந்தவர். இயற்பெயர் ராசய்யா. சிறு வயதிலேயே ஆர்மோனியம், கிடார் வாசிப்பதில் தேர்ச்சி பெற்றார். தனது சகோதரர்கள் 3 பேருடன் சேர்ந்து சுமார் 20 ஆயிரம் கச்சேரிகள், நாடகங்களில் இசை அமைத்தார்.

l திரைப்படத்துக்கு இசை அமைக்கும் ஆர்வத்தில் 26 வயதில் சென்னை வந்தார். தன்ராஜ் மாஸ்டரிடம் மேற்கத்திய பாணி பியானோ, கிடார் வாசிக்கக் கற்றுக்கொண்டார். லண்டன் டிரினிட்டி இசைக் கல்லூரியில் கிளாஸிகல் கிடார் தேர்வில் தங்கப் பதக்கம் பெற்றார்.

l ‘அன்னக்கிளி’ திரைப்படம் மூலம் 1976-ல் இசை அமைப்பாளராக அறிமுகமானார். படத் தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலம்தான் இவருக்கு ‘இளையராஜா’ என்று பெயர் சூட்டினார். இந்த படத்தின் ‘அன்னக்கிளி உன்னைத் தேடுதே’ பாடல், அனைத்து தரப்பினரையும் வெகுவாகக் கவர்ந்தது.

l தொடர்ந்து ‘பதினாறு வயதினிலே’, ‘பொண்ணு ஊருக்குப் புதுசு’ ஆகிய படங்களில் நாட்டுப்புற மணம் கமழ வலம்வந்த இவரது இசை, மக்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்றது. கர்னாடக இசையிலும் பல பாடல்களை அமைத்து புகழ்பெற்றார்.

l முதல்முறையாக தமிழ் சினிமாவில் ஸ்டீரியோ முறையில் இசை அமைத்தவர். பல ராகங்களை உருவாக்கியுள்ளார். ஏராளமான இசைத் தொகுப்புகளை வெளியிட்டு வருகிறார். தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி திரைப்படங்களுக்கும் இசை அமைத்துள்ளார்.

l இதுவரை 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்கள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு பின்னணி இசை அமைத்துள்ளார். 1993-ல் லண்டன் ராயல் ஃபில்ஹார்மானிக் ஆர்கெஸ்ட்ராவில் சிம்பொனிக்கு இசை அமைத்த ஆசியக் கண்டத்தின் முதல் இசை அமைப்பாளர் என்ற பெருமையைப் பெற்றார்.

l பத்மபூஷண், தமிழக அரசின் கலைமாமணி விருது, லதா மங்கேஷ்கர் விருது, கேரள அரசின் விருது என பல விருதுகளைப் பெற்றுள்ளார். சிறந்த இசை அமைப்பாளருக்கான தேசிய விருதை 4 முறை பெற்றுள்ளார்.

l தாய் மீது மிகுந்த பக்தி கொண்டவர். வீட்டு பூஜை அறையில் எத்தனை தெய்வங்களின் படங்கள் இருந்தாலும், அனைத்துக்கும் நடுவே உள்ள தனது அன்னையின் படத்தைக் கும்பிட்டுவிட்டே இவர் தனது நாளைத் தொடங்குவார். தாய்க்கு சொந்த ஊரில் ஒரு கோயில் எழுப்பியுள்ளார்.

l ஆன்மிகத்தில் அதிக நாட்டம் கொண்டவர். பல நூல்கள் எழுதியுள்ளார். ஆர்மோனியம் இல்லாமல் சிந்தித்தபடியே டியூன் போடக்கூடியவர். கதை, கவிதை, கட்டுரை எழுதுவது, பென்சில் டிராயிங் வரைவது, புகைப்படங்கள் எடுத்து அவற்றை ஃப்ரேம் செய்து மாட்டுவது ஆகியவை பொழுதுபோக்குகள். மதுரை பொன்னையா செய்துதந்த ஆர்மோனியப் பெட்டி இவரது இசைத்தோழன்.

l இவரது வாரிசுகளும் இசை அமைப்பாளர்களாகப் புகழ்பெற்று தந்தைக்குப் பெருமை சேர்க்கின்றனர். இசைஞானி, ராகதேவன் என்றெல்லாம் போற்றப்படும் இளையராஜாவின் இசை ராஜாங்கம் இன்றும் வெற்றி நடைபோடுகிறது.

இயற்கை வேளாண் விஞ்ஞானி "நம்மாழ்வார்" (G.Nammalvar)

இயற்கை விவசாயத்தின் தீவிரப் பிரச்சாரகரும் தமிழகத்தின் முதன்மை இயற்கை அறிவியலாளர்களில் ஒருவருமான டாக்டர் ஜி. நம்மாழ்வார் (G.Nammalvar) பி...